பட்டா வழங்குவதில் தொடரும் குளறுபடி விண்ணப்பதாரர்கள் அலைக்கழிப்பு

வில்லிவாக்கம், வீட்டு வசதி வாரிய திட்டங்களில், வீடு, மனை வாங்கியவர்கள், பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம்கள், அந்த கோட்ட அலுவலகங்கள் வாயிலாக நடந்தப்பட்டன.

அதன்படி, அண்ணா நகர், இரண்டாவது அவென்யூவில் உள்ள வாரிய அலுவலகத்தில், பிப்., 17 முதல் 22ம் தேதி வரை, முறையான அறிவிப்பின்றி முகாம்கள் நடத்தப்பட்டன. தெரிந்த ஒருசிலர் மட்டுமே முகாமில் பங்கேற்று, பட்டா உள்ளிட்ட சேவைக்கு விண்ணப்பித்தனர்.

அப்போது, விண்ணப்பதாரருக்கு எவ்வித ஒப்புகை சீட்டும் வழங்காமல் மனுவை பெற்றனர். தற்போது, மனுவுக்கு எவ்வித நடவடிக்கையும் இன்றி, மூன்று மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பயனாளிகள் தவித்து வருகின்றனர்

பட்டாவிற்கு விண்ணப்பித்த, வில்லிவாக்கம், சிட்கோ நகரை, கணேசன், 63, கூறியதாவது:

சிட்கோ நகரில், 1986ல் இருந்து வசிக்கிறேன். வாரியத்தின் முகாம் நடக்கும் நாள், இடம் குறித்த விபரங்களை துண்டு பிரசுரங்களாக அச்சடித்து, ஒவ்வொரு ஒதுக்கீட்டாளரின் வீட்டிற்கும் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், அண்ணா நகர், திருமங்கலத்தில் முகாம்கள் குறித்து எந்த விளம்பரமும் செய்யாமல் நடத்தினர்.

அந்தந்த கட்சியினர், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே தகவல் கொடுத்து அழைத்து சென்றுள்ளனர்.

நான், பட்டா வேண்டி விண்ணப்பித்ததற்கு எந்த ஒப்புகை சீட்டும் வழங்கவில்லை. முகாமில் வசூலித்த 60 ரூபாய்க்குகூட சீட்டுகள் வழங்கவில்லை.

மூன்று மாதங்களாக நடவடிக்கை எதுவும் இல்லாததால், வாரிய அலுவலகத்தில் சென்று கேட்டால், 'எப்போது மனு அளித்தீர்கள். வருவாய் துறையை சென்று பாருங்கள்' என, அலட்சியமாக கூறுகின்றனர்.

வருவாய் துறை அலுவலகத்தை அனுகினால், 'உங்கள் மனு வரவில்லை' என்கின்றனர். இப்படி கண்துடைப்பு முகாம்கள் நடத்துவதால், பயனாளிகள் மேலும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement