கொளந்தானுாரில் கழிப்பிடத்தை திறக்க மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், கரூர் அருகே கட்டி முடிக்கப்பட்ட, பொது கழிப்பிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் மாநகராட்சி, கொளந்தானூரில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளை, திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், கொளந்தானூரில் புதிய பொது கழிப்பிடம் கட்டி தரக்கோரி, அப்பகுதி மக்கள் கரூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 20 லட்ச ரூபாய் செலவில், அமராவதி ஆற்றுக்கு செல்லும் வழியில், புதிய கழிப்பிடம் கட்டப்பட்டது.
ஆனால், கழிப்பிடம் திறக்கப்படவில்லை. இதனால், கொளந்தானூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திறந்தவெளிப்பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் மற்றும் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது; 'கொளந்தானூரில் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டும், திறக்கவில்லை. இதனால் பொதுமக்கள், அமராவதி ஆற்றுப்பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பிடம் இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். கழிப்பிடத்தின் கட்டடமும், சேதமடையும் நிலை ஏற்படுகிறது. கழிப்பிடத்தை திறக்ககோரி, பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளோம்.
ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இவ்வாறு கூறினர்.

Advertisement