டாஸ்மாக் வழக்குகள் நிலை என்ன? அரசிடம் அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

சென்னை:டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகள் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 முதல் 2024 வரை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் தனி வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து, சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ல் சோதனை நடத்தியது.

இந்நிலையில், டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்குகளை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'அமலாக்கத் துறை விசாரணையை முடக்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுகிறது. டாஸ்மாக்கில் நடந்த 1,000 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான வழக்கை நியாயமாகவும், எந்த இடையூறும் இன்றி விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்.

'டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க, மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''வழக்குகளை வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்றுவது தொடர்பான விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

''மனுதாரர் குறிப்பிடும் 41 வழக்குகளிலும், டாஸ்மாக் நிர்வாகம் தான் புகார்தாரர் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும்,'' என்றார்.

அதற்கு நீதிபதிகள், 'குற்றம் சாட்டப்பட்டவர்களை சேர்க்கும் வரை, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகள் முடிக்கப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளிக்கப்படுமா' என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''வழக்கை முடிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். கீழமை நீதிமன்றம் தான், இது சம்பந்தமாக முடிவெடுக்கும்.

''இருப்பினும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரை, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான எந்த வழக்கையும் முடிக்கக் கோரி, கீழமை நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என, உள்துறை செயலருக்கு அறிவுறுத்தப்படும்,'' என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சேர்க்க, மூன்று வாரங்கள் மனுதாரருக்கு அனுமதி வழங்கினர்.

மேலும், முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட 41 வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டனர்.

Advertisement