டாஸ்மாக் விவகாரத்தில் தவறு இருந்தால் தண்டனை * சொல்கிறார் காங்., முன்னாள் தலைவர் அழகிரி

திண்டுக்கல்:''டாஸ்மாக் விவகாரத்தில் தவறு இருந்தால் தண்டனை கொடுங்கள்,'' என, திண்டுக்கல்லில் தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

அவர் கூறியதாவது: கவர்னர்கள் சட்டசபை உரிமையை பறிக்க கூடாது. சட்டசபை தீர்மானங்களை காரணம் இன்றி ஒத்தி வைக்க கூடாது. மாநில அரசை முடக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. சட்டசபை தீர்மானம் நிறைவேற்றினால் கவர்னர் தவிடு பொடியாக்குகிறார். அவருக்கு அரசியல் சாசனத்தில் அந்த உரிமை வழங்கப்படவில்லை.

மீண்டும் இரண்டு விதமான தாக்குதல்களை மாநில அரசு மீது மத்திய அரசு தொடுத்து இருக்கிறது. ஒன்று ஜனாதிபதி உச்சநீதிமன்றத்திற்கு கடந்த கால தீர்ப்பு சரியானதா என கடிதம் எழுதி பல்வேறு கேள்வி கேட்டுள்ளார். இரண்டாவது சென்னை உயர்நீதிமன்றம் முதல்வருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை பறித்துள்ளது. இரண்டும் மாநில உரிமைகள் மீதான போர் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி மத்திய அரசால் தடைபட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் நிடி ஆயோக் கூட்டத்துக்கு செல்வது சரியான விஷயம். அ.தி.மு.க., இதில் தவறான பிரசாரத்தை செய்கிறது. பிரதமரை சந்தித்து சரண்டர் ஆவது என அவர்களது (அ.தி.மு.க.,) பழக்க வழக்கத்தை சொல்கிறார்கள். ஒருமுறை ஸ்டாலின் புறக்கணித்தார் என்பதற்காக தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் என்று சட்டம் உள்ளதா. மத்திய அரசை கடுமையாக எதிர்க்ககூடிய முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். முதல்வர் நிடி ஆயோக் கூட்டத்துக்கு செல்வதை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது.

டாஸ்மாக் விவகாரத்தில் சோதனை நடந்துவிட்டால் குற்றவாளியா. நீதிமன்றம் தீர்ப்பு சொல்லாமலே குற்றவாளி என எப்படி சொல்ல முடியுமா. அரசியல் நோக்கங்களுக்காக சோதனை நடத்தப்படுகிறது. டாஸ்மாக் விவகாரத்தில் தவறு இருந்தால் தண்டனை கொடுங்கள். அதை காங்கிரஸ் மறுக்கவில்லை. விசாரணை என்று சொல்லிவிட்டு அதை முழுக்க ஊழல் என்று சொல்வது என்ன அர்த்தம் என்றார்.

Advertisement