சிறுமி பலாத்கார வழக்கு; வாலிபருக்கு '20 ஆண்டு'

கொப்பால்: கொப்பால் மாவட்டம், குஷ்டகி தாலுகாவின் தோபலகட்டி கிராமத்தில் வசிப்பவர் மஹந்தேஷ், 28. இதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாக நம்ப வைத்தார். 2023ல் சிறுமி தனியாக இருந்த போது, வீட்டின் பின்புறம் இருந்த ஷெட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதே போன்று, வயலுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். இதை யாரிடமும் கூறக்கூடாது என, மிரட்டினார். அதன்பின் சிறுமியை வெளியூருக்கு கடத்தி சென்று, திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, குஷ்டகி போலீசார், மஹந்தேஷை கைது செய்தனர். விசாரணையை முடித்து, கொப்பாலின் போக்கோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணையில், வாலிபரின் குற்றம் உறுதியானதால், இவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி குமார், நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement