ஆதாயம் பெற தனியாருக்கு முன்னுரிமை: சும்மா கிடக்கும் மின் வாரிய ஆய்வகம்

சென்னை:தமிழகத்தில் உயரழுத்த மின் இணைப்புகள், தனியார் மின் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர்களின் செயல்பாட்டை சோதிக்கும் பணியில், மின் வாரிய ஆய்வகத்திற்கு பதில், தனியார் ஆய்வகங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக புகார் எழுந்து உள்ளது.

இது குறித்து, மின் வாரிய பணியாளர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்துவதுடன், மின் வாரியத்திற்கும் விற்கின்றன. இதற்காக, அந்த மின் நிலையங்களில், மின் வாரியத்தால் 'மீட்டர்'கள் பொருத்தப்பட்டு உள்ளன.

அதேபோல, உயரழுத்த பிரிவில் இடம் பெறும் தொழிற்சாலைகளில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த மீட்டர்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்ய, குறிப்பிட்ட இடைவெளியில் சோதனை செய்யப்படும்.

இதற்காக மீட்டரை கழற்றி எடுத்து, என்.ஏ.பி.எல்., எனப்படும் தேசிய சோதனை மற்றும் அளவு திருத்த ஆய்வக அங்கீகார வாரியம், அனுமதி அளித்துள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்படும்.

மின் வாரியத்திற்கு சென்னையில் ஒரு ஆய்வகமும், திருநெல்வேலி மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடமாடும் ஆய்வகங்களும் உள்ளன.

இந்த ஆய்வகங்களுக்கு மீட்டரை அனுப்பாமல், அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்களுக்கு அனுப்பவே அதிகாரிகள் முன்னுரிமை தருகின்றனர். மின் வாரிய ஆய்வக கட்டணத்துடன் ஒப்பிடும் போது, தனியார் ஆய்வகத்தில் 35 - 40 சதவீத கட்டணம் அதிகம்.

இதில், அதிகாரிகளுக்கும் பங்கு தரப்படுகிறது. எனவே, தனியார் ஆய்வகங்களுக்கு அனுப்பி மீட்டரை பரிசோதிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.

இதேபோல், வீடு உள்ளிட்ட மின் இணைப்புகளிலும் குறைபாடு உடைய மீட்டர்களை பரிசோதிக்கவும், தனியார் ஆய்வகங்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. இதனால், மின் வாரியத்தின் சொந்த ஆய்வகங்கள் வேலையின்றி இருக்கின்றன.

மேலும், மின் வாரியத்திற்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் கவனம் செலுத்தி, மின் வாரிய ஆய்வகங்களை முழு வீச்சில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement