ஜே.என்.சாலையில் தேங்கும் மழை நீர் கால்வாய் துார் வாருவதே நிரந்தர தீர்வு

திருவள்ளூர்:சென்னை, ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து திருப்பதி, திருத்தணி, செங்குன்றம் செல்லும் வாகனங்கள் அனைத்தும், திருவள்ளூர் ஜே.என்.சாலையை பயன்படுத்தி வருகின்றன. இச்சாலையில், மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் அமைந்துள்ளன.

இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழைநீர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கும் - தபால் அலுவலகத்திற்கும் இடையில் குளம் போல் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகளும், குடியிருப்புவாசிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நேற்று காலை சாலையில் தேங்கிய தண்ணீரை, நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி ஊழியர்கள் மழைநீர் கால்வாய் வழியாக அகற்றினர். ஒவ்வொரு மழைக் காலத்திலும், இப்பிரச்னை தொடர்கதையாக உள்ளது.

ஜே.என்.சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலை துறையால் அமைக்கப்பட்ட கால்வாய் துார்வாராமல், அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீர் வெளியேற வழியில்லாமல் சாலையில் தேங்கி வருகிறது.

எனவே, சாலையோரம் உள்ள கால்வாயை துார்வாரி, அடைப்பை அகற்றுவதே நிரந்தர தீர்வாக இருக்கும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement