திருமங்கலத்தில் சுவாமி சிலைகள் உடைப்பு

திருமங்கலம்:திருமங்கலம் அருகே கோவிலில், 10க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட குதிரைச்சாரிபுரம், பழனியாபுரத்தில், ஏழு பேர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அய்யர் சாமி, பெரிய கருப்புசாமி, சன்னாசி, மாயாண்டி, ராக்காச்சி அம்மன், சின்னச்சாமி, ஆண்டி சாமி என, 20க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு, இந்த கோவில் வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அனைத்து சுவாமி சிலைகளையும் அடித்து நொறுக்கி, துண்டு, துண்டாக உடைக்க முயற்சித்துள்ளனர்.
இதில், அய்யர் சாமி, அம்மன் சிலைகளின் தலை பகுதி சேதமானது. ஆண்டி சாமி சிலை இரண்டாக உடைக்கப்பட்டு, பீடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டிருந்தது.
குறிப்பாக, சுவாமி சிலைகளின் வலது கரங்கள் மட்டும் துண்டாக்கப்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் சேதமாகியுள்ளன. கோவில் வளாகத்தில் இருந்த மணியும் திருடு போயிருந்தது.
கிராம மக்கள், திருமங்கலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார், கோவில் வளாகத்தை ஆய்வு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.