கட்டாய கல்வி உரிமையை முடக்க மத்திய அரசு முயற்சி * வைகோ குற்றச்சாட்டு

1

சென்னை:தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை முடக்க, மத்திய அரசு முயற்சிப்பதாக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

'புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான, மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், தமிழகம் கையெழுத்திடவில்லை. எனவே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் படிக்கும் 25 சதவீத மாணவர்களுக்கான, மத்திய அரசின் பங்களிப்பு தொகை ஒதுக்கப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'புதிய கல்விக் கொள்கையை ஏற்காத, பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்களுக்கான நிதி நிறுத்தப்படுவதை ஏற்க முடியாது. உடனடியாக தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்திருந்தது. ஆனாலும், மத்திய அரசு நிதி வழங்கவில்லை. கல்வித் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. இச்சூழலில், தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை முடக்கி வைக்கும் வகையில், இத்திட்டத்திற்காக வழங்க வேண்டிய, 617 கோடி ரூபாயை விடுவிக்காமல், அடாவடியாக மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement