தாலுகா அலுவலக கட்டடத்தில் வளரும் மரங்களால் ஆபத்து

கரூர், கரூர் தாலுகா அலுவலக கட்டடத்தின் மேல் பகுதி மற்றும் சுவற்றில் மரம், செடிகள் முளைத்துள்ளது. இதனால், பழமை வாய்ந்த கட்டடம் சேதமடையும் அபாயம் உள்ளது.

கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள, தாலுகா அலுவலக கட்டடம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதில், வட்ட வழங்கல் அலுவலகம், கிளைச்சிறை மற்றும் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகள் காரணமாகவும், கிளைச்சிறையில் உள்ள கைதிகளை பார்வையிட, உறவினர்கள் உள்பட நாள்தோறும், நுாற்றுக்கணக்கானோர், கரூர் தாலுகா அலுவலக வளாகத்துக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கரூர் தாலுகா அலுவலக கட்டடத்தின் மேல்பகுதி, சுவற்றில் அதிகளவில் மரங்கள் மற்றும் செடிகள் முளைத்துள்ளன. தற்போது, தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், மரம் மற்றும் செடிகள் பெரிய அளவில் வளரும் நிலை உள்ளது. எனவே, பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, பழமை வாய்ந்த கரூர் தாலுகா அலுவலகம் சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே, தாலுகா அலுவலக கட்டடத்தில் வளர்ந்துள்ள மரம், செடிகளை அகற்றி விட்டு, பராமரிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement