சத்தமாக பாட்டு கேட்ட கணவரை கண்டித்த மனைவி மீது ஆசிட் வீச்சு

பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரில் மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டதை கண்டித்த மனைவி மீது, ஆசிட் வீசிவிட்டு தப்பிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடகாவின் பெங்களூரில் சிதேதஹள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள வீட்டில், 44 வயதான அழகு கலை நிபுணரும், அவரது கணவரும் வசித்து வருகின்றனர்.

கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்த மனைவியிடம், மது அருந்த கணவர் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

பணம் தர மறுத்த அவரை, கணவர் துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இறுதியில், பணம் கொடுத்தவுடன் வெளியே சென்ற கணவர் குடித்துவிட்டு வீடு திரும்பினார். சில மணி நேரத்துக்குப் பின், தன் மொபைல் போனில் மிகவும் சத்தமாக வைத்து அவர் பாட்டு கேட்டார்.

இதை அவரது மனைவி கண்டித்தார். சத்தத்தை குறைத்து வைத்து பாட்டு கேட்கும்படி வலியுறுத்தினார். இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் துவங்கிய சண்டை கைகலப்பாக மாறியது.

இறுதியில், வீட்டு கழிப்பறையில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து வந்து மனைவியின் முகம் மற்றும் தலையில் ஊற்றிய கணவர், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

மனைவியின் அலறலைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ஆசிட் வீசிவிட்டு தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement