கிளாசனின் ருத்ரதாண்டவம்; 279 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்

புதுடில்லி: கோல்கட்டாவுக்கு எதிரான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கிளாசனின் அதிரடியான ஆட்டத்தால், ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 278 ரன்கள் குவித்துள்ளது.


அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்து வரும் லீக் போட்டியில் கொல்கட்டா - ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.


அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி ஆரம்ப முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபிஷேக் வர்மா, ஹெட் ஆகிய இருவரும் சிக்சர் மழை பொழிந்தனர். முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். அதைத் தொடர்ந்து, களமிறங்கிய கிளாசன் வான வேடிக்கை காட்டினார்.


ஹெட் 76 ரன்களும், இஷான் கிஷான் 29 ரன்களும் எடுத்தனர். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கிளாசன் 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இது அவரது 2வது சதமாகும். இதன்மூலம், பிரீமியர் லீக் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த 4வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்துள்ளது. பிரீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் இது 3வது அதிகபட்ச ஸ்கோராகும். முதல் இரு இடங்களிலும் (287, 286) ஐதராபாத்தே உள்ளது குறிப்பிடத்தக்கது.


கிளாசன் 39 பந்துகளில் 105 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 9 சிக்சர்கள் 7 பவுண்டரிகளை விளாசினார்.

Advertisement