உணவு சமைத்து தராத தாய் கொலை: குடிகார மகன் கைது

மும்பை:மஹாராஷ்டிராவில் உணவு சமைத்து கொடுக்காமல் படுத்திருந்த தனது தாயை கொன்றதாக 25 வயது குடிகார மகனை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில், தல்னர் பகுதியில் உள்ள வாத்தோட் கிராமத்தில் குடிசை வீட்டில் 65 வயதான பெண் திபாபாய் பவாரா, தனது மகன் அவ்லேஷ் வசித்து வருகிறார். திபாபாய் பவாரா நேற்று இரவு தனது மகன் அவ்லேஷுக்கு மீன் உணவை தயாரித்துவிட்டு, தூங்கச் சென்றார். அப்போதுமீன் வாசனையால் கவரப்பட்ட ஒரு தெருநாய் வீட்டிற்குள் நுழைந்து உணவை சாப்பிட்டு விட்டு நாசமாக்கியது.
குடிபோதையில் இருந்த அவ்லேஷ் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தபோது, அந்த உணவை சாப்பிட முடியாத நிலையில் பார்த்ததும், கோபம் அடைந்தான், பின்னர் துாங்கி கொண்டிருந்த தனது தாயாரை எழுப்பி, தனக்கு புதிய உணவு சமைக்க சொல்லி உள்ளான்.
தாயார் பதிலளிக்காததால், கோபமடைந்த அவன், அருகில் இருந்த மரக்கட்டையால் அவரை தலையில் பலமாக தாக்கிவிட்டு குடிபோதையில் படுத்துவிட்டான். இன்று காலை
அவன் விழித்தெழுந்தபோது, அவரது தாயார் அசையாமல் கிடப்பதைக் கண்டு, அதிர்ந்து போன அவன், தனது உறவினர்களை அழைத்தான், உறவினர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, அவனது தாயார் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதைக் கண்டனர்.
இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவ்லேஷை
கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தல்னர் காவல் நிலைய போலீசார் கூறியதாவது:
தாயாரை கொலை செய்த அவ்லேஷை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.