கால் சென்டருக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி : கால் சென்டர் மற்றும் தவறாக பயன்படுத்தப்படும் வெப்சைட் மற்றும் ஆப் சம்பந்தமாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் சாரம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால் சென்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதேபோல், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என கூறியும் சில அலுவலகங்கள் திடீரென போலியாக துவங்கப்பட்டுகிறது. ஆனால், அவைகள் போதிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருவதாகவும், அதன் மூலம் பலரிடம் பணம் மோசடி நடப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் கால் சென்டர் அலுவலகத்தில் புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், மத்திய, மாநில அரசின் அனுமதி பெறாமல் கால் சென்டர் இயங்கி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், பி.பி.ஓ மற்றும் கால் சென்டர் நடத்துபவர்கள் மத்திய, மாநில அரசிடமிருந்து முறையான அனுமதி பெறுவது கட்டாயம். குறிப்பாக, மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே, தங்கள் சேவையைத் தொடரவேண்டும். அவ்வாறு அனுமதி பெறாதவர்கள் உடனடியாக மத்திய, மாநில அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும். மீறும் பட்சத்தில், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அனைத்து விதமான சைபர் குற்றங்கள் குறித்த புகார் மற்றும் தகவல்களை 1930 மற்றும் 0413-2276144, 9489205246 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.cybercrime.gov.in என்ற இணையதளதிலும் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement