மியான்மரிலிருந்த தப்ப முயன்ற 427 ரோஹிங்கியா அகதிகள் பலி?

6

நைப்பியதோ : மியான்மரில், கடல் மார்க்கமாக இரு கப்பல்களில் தப்பிச்செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகள், 427 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என, ஐ.நா., சபை தெரிவித்துள்ளது.



மியான்மரில், 2017ம் ஆண்டு முதல் அந்நாட்டு ராணுவத்தால், அங்கு வசிக்கும் முஸ்லிம் சிறுபான்மையான ரோஹிங்கியா மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சிலர் கடல் மார்க்கமாக வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.

இந்நிலையில், மியான்மரில் இருந்து கடல் மார்க்கமாக வேறு நாடுகளுக்கு தப்பிச்செல்லும் நோக்கில் சமீபத்தில் இரு கப்பல்களில் ஏராளமான அகதிகள் சென்றனர். அந்த கப்பல்கள் இரண்டும் கடலில் மூழ்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுகுறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் வெளியிட்ட அறிக்கை:


மியான்மரில் இருந்து கடல் மார்க்கமாக தப்ப முயன்ற ரோஹிங்கியா அகதிகள் சென்ற இரண்டு கப்பல்கள் கடலில் மூழ்கின. இதில் கடந்த 9ம் தேதி 267 பேர் சென்ற கப்பலில், 66 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இதேபோல் 10ம் தேதி, 247 பேருடன் சென்ற கப்பலில், 21 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர்.


மீதமுள்ள 427 பேரின் நிலை பற்றி இதுவரை எந்த விபரமும் கிடைக்கவில்லை. இதுபற்றி ஐ.நா., குழு முதற்கட்ட விசாரணையை துவக்கியுள்ளது. அவர்கள் உயிரிழந்திருந்தால் இந்த ஆண்டின் மோசமான விபத்தாக இது கருதப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement