'ராணிப்பேட்டை சிப்காட்டில் ஆபத்தான குரோமிய கழிவுகளை அகற்றணும்'

1

சென்னை: 'ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளை அகற்றும் திட்டத்தை உடனே செயல்படுத்தி, நோயிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

ராணிப்பேட்டை சிப்காட்டில், 1975ம் ஆண்டில் துவங்கப்பட்ட, 'குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்' தொழிற்சாலை பல்வேறு மாற்றங்களுக்கு பின், 1989ல் மூடப்பட்டது.

இந்த ஆலையில், 2.50 லட்சம் டன் குரோமியம் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அது அகற்றப்படாததால், அது வேதிவினை புரிந்து நீரிலும், நிலத்திலும் கலந்து வருகிறது.

கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த பேரழிவால், அப்பகுதியில் உள்ள, 700 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் எதற்கும் பயன்படாத மலட்டுத்தன்மை கொண்டதாக மாறி விட்டன.

அதிக பாதிப்பு



இன்னொரு புறம் அங்குள்ள மக்கள் புற்றுநோய், அதிக ரத்த அழுத்தம், நுரையீரல் புற்றுநோய், இதயநோய்கள், மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு நோய்களால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு காரணம், மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரிலும் குரோமியக் கழிவுகள் கலந்திருப்பதுதான் என கூறப்படுகிறது.

இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்குடன், ஆறு ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி குரோமியக் கழிவுகளை அகற்றவும், அப்பகுதியை சுத்திகரிக்கவும், 223.17 கோடி ரூபாயும்; நீரில் கலந்திருக்கும் குரோமிய மாசுக்களை அகற்ற 11.28 கோடி ரூபாயும் செலவாகும் என, மதிப்பிடப்பட்டது.

வல்லுநர் கருத்து



இது தவிர, தண்ணீரில் குரோமிய மாசுக்களை முற்றிலுமாக அகற்ற, மாதம் 1.55 கோடி ரூபாய் வீதம், 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செலவழிக்க வேண்டும் என, வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதுதான் இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

எனவே, இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல், பெயரளவிலான திட்டங்களை செயல்படுத்தாமல், குரோமிய கழிவுகளை நிரந்தரமாக அகற்றும் திட்டத்தை, தமிழக அரசு உடனே செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement