அரசு கலைக் கல்லுாரி கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க மாணவர்கள் கோரிக்கை

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரி கட்டுமானப் பணியை விரைந்து முடித்து, வகுப்புகளை துவங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருக்கோவிலுார் அரசு கலைக்கல்லுாரியை கடந்த, 2022ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி சந்தைப்பேட்டையில் தனியார் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக துவங்கியது.

இடநெருக்கடி ஏற்பட்டதால் அரசுக்கு சொந்தமான இடத்தில் கல்லுாரியை கட்ட வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சந்தைப்பேட்டை, தனியார் திருமண மண்டபத்திற்கு பின்புறத்தில், 1.53 எக்டர் பரப்பளவில், கல்லுாரி கட்டுவதற்கு உயர்கல்வித்துறை சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 15.58 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தொழில்நுட்ப கல்வி வட்டம் சார்பில், 49 ஆயிரத்து 593 சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட கல்லுாரி கடந்த, 2024ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின், காணொலி மூலம் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டினார்.

தற்போது, 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளையும் வேகமாக முடித்து புதிய கட்டடத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்பை துவங்க உயர்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் துறை அலுவலகமும் செயல்பாட்டிற்கு வரவில்லை. அத்துடன் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, இடத்தை முன்னாள் அமைச்சர் பொன்முடியும், கலெக்டரும் பார்வையிட்டதுடன் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

திருக்கோவிலுாரில் முடிவுற்ற பணிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணியை நிறைவு செய்யாத திட்டங்களை விரைவு படுத்தவும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பணிகளை விரைவாக துவங்க சம்மந்தப்பட்ட ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருக்கோவிலுார் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement