ஹிந்து - முஸ்லிம் இடையே பிரிவினை ஏற்படுத்துவதே பாகிஸ்தானின் நோக்கம்: ஓவைசி

14


ரியாத்: இந்தியாவில் ஹிந்து - முஸ்லிம் பிரிவினைவாதத்தை தூண்டுவதே பாகிஸ்தானின் முதன்மை நோக்கம் என்று அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.


மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவுடன் அரபு நாடுகளுக்கு சென்றுள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் ஓவைசி, சவுதி அரேபியாவில் பாகிஸ்தானின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி பேசினார்.


அவர் பேசியதாவது; அரபு நாடுகள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையே, பாகிஸ்தான் தவறான செய்திகளை பரப்பி வருகிறது. நாம் முஸ்லிம் நாடு, இந்தியா முஸ்லிம் நாடு அல்ல என்று. ஆனால், இந்தியாவில் 24 கோடி பெருமைமிக்க முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.

அதேபோல, உலகில் உள்ள முஸ்லிம் பேரறிஞர்களை விட இந்தியாவில் அதிகம் பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சிறந்த அரபு மொழியை பேசி வருகின்றனர். பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு என்பதால், இந்தியா முஸ்லிம்களை ஒடுக்குவதாக போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர்.


மே 9ம் தேதி என்ன நடந்தது தெரியுமா? 9 விமானப் படை தளங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. இந்தியா நினைத்திருந்தால், விமானப்படை தளங்களை முற்றிலுமாக அழித்திருக்க முடியும். ஆனால், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 9 பயங்கரவாத முகாம்களின் தலைமையகம் தாக்கி அழிக்கப்பட்டது.


பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குவதை தடுக்க பாகிஸ்தானை மீண்டும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் வைக்க வேண்டும். பாகிஸ்தானின் படை தளபதியாக அசிம் முனிர் நியமிக்கப்பட்ட போது, அமெரிக்காவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட முகமது எஷானுடன் கைகுலுக்கும் போட்டோ வெளியாகியது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இணக்கமாக செயல்படுவது குறித்த ஆதாரங்கள் உள்ளன. பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் ஹிந்து - முஸ்லிம்களிடையே மோதலை உண்டாக்குவதே பாகிஸ்தானின் முழுநேர பணியாக உள்ளது, எனக் கூறினார்.

Advertisement