'பார்க்கிங்' இடமாக மாறும் பஸ் ஸ்டாண்ட் 'ரேக்'

திருப்பூர்; புதிய பஸ் ஸ்டாண்ட் 'ரேக்' சுற்றுலா வாகனங்கள், கார்களின் ஸ்டாண்டாக மாற துவங்கியுள்ளது.

திருப்பூர் கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்ட பின், தென் மாவட்டங்களில் இருந்து திருப்பூர் வரும் பஸ்கள், அங்கேயே நிறுத்தப்படுகிறது. திருச்சி, தஞ்சாவூர் மார்க்கமாக வரும் பஸ், அவிநாசி வழி கோவை, அந்தியூர், கோபி, பெருமாநல்லுார் வழி ஈரோடு பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது.

ஐம்பதுக்கும் அதிகமான பஸ்கள் நிற்கும் வகையில் விலாசமாக 'ரேக்' உள்ளது. ஆனால், 20 க்கும் குறைவான பஸ்கள் மட்டும் வடக்கு புறத்தில் நிறுத்தி, அங்கிருந்து இயக்கப்படுகிறது. மேற்கு மற்றும் தெற்கு புற ரேக் காலியாக உள்ளது. இங்கு வாடகைகார்கள், சுற்றுலா வேன் உட்பட தனியார் வாகனங்கள் பார்க்கிங் கட்டணமில்லாமல் நாள் முழுதும் ரேக்கில் நிறுத்தப்படுகிறது.

வருமா மாற்றம்



திருப்பூர் - அவிநாசி ரோடு, புஷ்பா ரவுண்டானா ஸ்டாப்பில் இரவு, 8:00 துவங்கி, நள்ளிரவு, 12:00 மணி வரை ஆம்னி பஸ்கள் நிறுத்தி இயக்கப்படுகிறது. பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து, பத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் புறப்படுகிறது.

ஏற்கனவே பரபரப்பாக உள்ள இந்த பகுதியில் ஆம்னி பஸ்களும் வந்து சேர்வதில் நெரிசல் அதிகமாகிறது. மாநகராட்சி அதிகாரிகள் ஆம்னி பஸ் நிறுத்துமிடத்தை மாற்றினால், புஷ்பா ரவுண்டானாவில் நெரிசல் குறையும்.

Advertisement