கனிமவள பிரச்னைகளுக்கு தீர்வு காண சிறப்பு கூட்டம்! கலெக்டர் அறிவிப்பு: விவசாயிகள் வரவேற்பு

திருப்பூர்: ''விவசாயிகள், பொதுமக்களிடமிருந்து கனிமவளத்துறை தொடர்பான பிரச்னைகளை மட்டும் கேட்டு, தீர்வு காணும்வகையில், சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்'' என, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டமும், மாதத்தின் இறுதி வாரத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டமும் நடத்தப்பட்டுவருகிறது. மாவட்டத்தில், பல்லடம், மடத்துக்குளம், காங்கயம், அவிநாசி, ஊத்துக்குளி பகுதிகளில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. சில குவாரிகள், விதிமுறையை மீறி அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் பரப்பளவில் கனிமவளங்களை வெட்டி எடுப்பதாகவும், இதற்காக சட்ட விரோதமாக அதிக வெடி மருந்து பயன்படுத்தப்படுவதாகவும், விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், விவசாய சங்கத்தினர் தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர்.

கனிமவளம் சார்ந்த பிரச்னைகளுக்கு, கனிமவளத்துறை, வருவாய்த்துறை, போலீசார் உரிய தீர்வு காண்பதில்லை; குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கும் மனுக்களுக்கும் சரியான பதிலளிப்பதில்லை; கனிமவளத்துறை சார்ந்த பிரச்னைகளை விவாதித்து, தீர்வு காண ஏதுவாக, பிரத்யேகமான குறைகேட்பு கூட்டம் நடத்தவேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்திலும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்,

பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்திலும், பெரும்பாலான குவாரிகளில் படிக்கட்டுகள் இல்லை. சிவகங்கை போன்ற அசம்பாவிதம், திருப்பூர் குவாரிகளிலும் நிகழ வாய்ப்பு உள்ளது. ஆகவே படிக்கட்டு உள்ள குவாரிகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கவேண்டும்.

திருப்பூரில், அனுமதிக்கப்பட்டதைவிட அதிகளவு கனிமவளம் ஏற்றிச்செல்லும் லாரிகளால், சாலைகள் சேதமடைகின்றன. இதுதொடர்பாக, போலீசார், வருவாய்த்துறை உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கூடுதல் கனிமவளங்களை வெட்டி எடுக்கும் குவாரிகளை அளவீடு செய்து, அபராதம் அபராதம் விதிக்க தயங்குவது ஏன். கோடங்கிபாளையம் கல்குவாரியில், அதிக பரப்பரவில் கனிமவளம் எடுப்பதற்காக, 81 லாரிகளில், சட்டவிரோத வெடிமருந்து கொண்டுவரப்பட்டுள்ளது; இதுதொடர்பாக, போலீசார் உள்பட எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தாராபுரத்தில், அனுமதியின்றி கனிமவளம் ஏற்றிச்சென்ற லாரியை ஆர்.ஐ., துணிச்சலோடு பிடித்தார். அமைச்சரின் உதவியாளர், ஆர்.ஐ., யை மிரட்டி, லாரியை தப்பவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு, அவர் பேசினார்.

----

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்தில், பங்கேற்ற விவசாயிகள்.



தீர்வு காணப்படும்

கனிமவளத்துறை அதிகாரிகள், ட்ரோன் சர்வே முடிக்கப்பட்ட கல்குவாரிகளில், விதிமீறல் கண்டறியப்பட்டால், அளவீடு செய்து, உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும். விவசாயிகள், பொதுமக்களிடமிருந்து, கனிமவளத்துறை சார்ந்த பிரச்னைகள் தொடர்பான மனுக்களை பெற்று, தீர்வு காணப்படும். இதற்காக, கனிமவளத்துறை, வருவாய்த்துறை, போலீஸ் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும்வகையில் பிரத்யேகமான குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.- கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட கலெக்டர்

Advertisement