உரம் தேவையை அறிந்து உரமிட வேண்டும்

கரூர்: ''விவசாயிகள் மண் பரிசோதனை மூலம், உரம் தேவையை அறிந்து, விவசாய நிலங்களுக்கு உரமிட வேண்டும்,'' என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பபட்ட, பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.


பிறகு, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 5,112 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் பயிர் சாகுபடிக்காக, 180 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சிறுதானிய விதைகள், 13 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. எண்ணை வித்துக்கள், ஐந்து மெட்ரிக் டன், பயறு வகைகள், 36 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. கரூர் மாவட்டத்தில், நடப்பாண்டு மே மாதம் வரை, 156.65 மி.மீ., மழை பெய்துள்ளது.கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், வெங்கமேடு, காந்தி கிராமம் ஆகிய உழவர் சந்தைகளில், 50.48 மெட்ரிக் டன் காய்கள், 25.03 லட்ச ரூபாய் மதிப்பில் விற்பனை நடந்துள்ளது. 10 ஆயிரத்து, 646 நுகர்வோர் பயன் அடைந்துள்ளனர். விவசாயிகள் மண் பரிசோதனை மூலம், உரத்தேவையை அறிந்து, விவசாய நிலங்களுக்கு உரமிட வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு, 10 முதல், 15 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் பதில் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சிவானந்தம், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தியாகராஜன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சாந்தி, வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குனர் நிர்மலா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, விவசாயிகள் தரப்பில், 69 கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன

Advertisement