வழிபாட்டு உரிமை அவமதிப்பு: காடேஸ்வரா

திருப்பூர் : ''ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை தமிழக அரசு அவமதிக்கிறது,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம்சாட்டி உள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை:
வேலுார் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, ஜிட்டப்பள்ளி கிராமத்தில், 200 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில், நடுகல் மற்றும் முனீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த திறந்தவெளி கோவிலை, சுற்றுச்சுவர் எழுப்பி, கோவில் கட்ட முயற்சித்த போது, கோவிலுக்கு அருகில் குடியேறிய பிற மதத்தை சேர்ந்த சிலர், ஆட்சேபனை தெரிவித்தனர் என்பதற்காக, தாசில்தார் கோவில் கட்ட தடை விதித்துள்ளார்.
பொதுமக்கள், கலெக்டரிடம் முறையிட்டனர். கோவில் கட்ட தடை ஏற்படுத்திய நிலையில், தற்போது, கோவில் திருவிழா நடத்தவும் போலீசார் தடை விதித்துள்ளனர். நீண்ட போராட்டத்துக்கு பின், பெண்களை மட்டும் பொங்கல் வைக்க அனுமதித்துள்ளனர்.
இதுதவிர, பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, போலீசாரால் மிரட்டப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக, மக்களின் வழிபாட்டு உரிமையை காவல்துறை பறித்துள்ளது. இது ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையை அவமதிக்கும் செயல். இவ்வாறு, காடேஸ்வரா கூறியுள்ளார்.







