விவசாய விளைபொருட்கள் ரூ.100 கோடிக்கு விற்பனை

மேட்டுப்பாளையம்; காரமடை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்தாண்டு, 100 கோடி ரூபாய்க்கு, விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதன் வாயிலாக, 1262 விவசாயிகள் பயனடைந்தனர் என, கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

காரமடையில் சிறுமுகை சாலை சாஸ்திரி நகர் அருகே, தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிக துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது.

இங்கு விவசாய விளை பொருட்களை இருப்பு வைக்க, குளிர் பதன கிடங்கும், சாதாரண கிடங்குகள் உள்ளன. விவசாய விளை பொருட்களை காய வைக்க இரண்டு உலர் களங்கள் உள்ளன.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறியதாவது: இங்கு அறுவடை செய்த விளை பொருட்கள், விலை குறைவாக இருக்கும் போது, இருப்பு வைக்கவும். விலை உயர்வாக இருக்கும் பொழுது, விற்பனை செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள கிடங்குகள் உள்ளன. இதில் இருப்பு வைக்கும் விளை பொருட்களுக்கு, 15 நாட்களுக்கு எவ்வித வாடகையும் இல்லை. அதற்கு மேல் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒரு குவிண்டாலுக்கு, 25 பைசா வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பு வைத்துள்ள விளை பொருட்களுக்கு, 5 சதவீதம் வட்டியில் பொருளீட்டு கடன் வழங்கப்படும்.

கடந்தாண்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 9,500 டன் விவசாய விளை பொருட்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யப்பட்டன.

பாக்கு, கொப்பரை தேங்காய், தேங்காய், கம்பு, ராகி, மக்காச்சோளம், காய்கறிகள், பழங்கள் என ஏராளமான விளைபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டன.

விலை உயர்வாக இருந்த போது விற்பனை செய்ததில், 100 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 1,262 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விரைவில் சோலார் உலர் களம் அமைக்கப்படும்.

இவ்வாறு கண்காணிப்பாளர் கூறினார்.

Advertisement