அங்கன்வாடி மையத்தில் சேர்க்கை துவக்கம்
கடலுார்; அங்கன்வாடி மையத்தில் மழலையர்கள் சேர்க்கை நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
சமூக நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கடலுார் மாவட்டத்தில் 2,023 அங்கன்வாடி குழந்தைகள் மையங்கள் உள்ளன. மையங்களில் 2 வயது முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டு, ஊட்டச்சத்து, ஆரம்பகால கல்வி, சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது.
குழந்தைகள் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு, பள்ளிக்கு செல்ல ஆயத்தப்படுத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான குழந்தைகள் சேர்க்கைக்கு அங்கன்வாடி பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று குழந்தைகள் சேர்க்கை பணியை மேற்கொண்டுள்ளனர்.
பெற்றோர் தங்களின் 2 முதல் 5 வயது குழந்தைகளை ஜூன் மாதத்தில் அங்கன்வாடி குழந்தைகள் மையங்களில் தவறாமல் சேர்க்க வேண்டும். குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணி நடப்பதால், இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.