கேரளாவில் மீண்டும் மூளையை தின்னும் அமீபா தாக்குதல்: 3 குழந்தைகள் பாதிப்பு

4

திருவனந்தபுரம்; கேரளாவில் கோயில் குளத்தில் மூளையை தின்னும் அமீபாவின் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட 3 குழந்தைகள் மருத்துவமனையில் உள்ளனர்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


நெடுமங்காடு கரிப்பூரில் முகவூர் மகாவிஷ்ணு கோயில் உள்ளது. இங்குள்ள குளத்தில் குளித்த 3 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்கள் மூன்று பேரும் மூளையை தின்னும் அமீபாவின் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


ஆய்வக பரிசோதனையில் மூளையை தின்னும் அமீபா நுண்ணுயிரிகள் இருப்பது தெரிய வந்தது. இந்த விவரம் வெளியானதை அடுத்து, மக்கள் மத்தியில் பீதி நிலவியது. நகராட்சியின் அலட்சியம், சுகாதாரத்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ந நடவடிக்கைகள் இந்த சம்பவத்தை மூடி மறைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.


பொதுமக்களின் கடும் குற்றச்சாட்டுகள் எதிரொலியாக, கோயில் குளத்தில் மாதிரிகளை அதிகாரிகள் பரிசோதனைக்காக சேகரித்தனர். பின்னர் நடத்தப்பட்ட பகுப்பாய்வு சோதனையில் அந்த குளத்தின் நீரில் மூளையை தின்னும் அமீபா எச்சங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.


இந் நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளின் உடல்நிலை மோசம் அடைந்ததால் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அமீபிக் மெனிங்கோ செபாலிடிஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


குழந்தைகளின் உடல்நலம் பாதிக்க காரணமாக இருந்த கோயில் குளம், 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. ஆண்டுதோறும் திருவிழாக்கள் நேரங்களில் மட்டுமே குளம் சுத்தம் செய்யப்படும்.


தற்போது கோயில் குளத்தில் மூளையை தின்னும் அமீபா எச்சங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளதால், குளத்தை சுற்றிலும் கயிறுகள் கட்டப்பட்டு, மக்கள் யாரும் செல்லாத வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.

Advertisement