ஒரே மாதத்தில் ரூ.186 கோடிக்கு சந்தன பொருட்கள் விற்பனை

பெங்களூரு: ''கடந்தாண்டை விட, நடப்பாண்டு மே மாதத்தில், சந்தன சோப் 186 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது,'' என, மாநில தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

பெங்களூரில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் அளித்த பேட்டி:

கே.எஸ்.டி.எல்., எனும் கர்நாடகா சோப் அண்டு டிடர்ஜென்ட் நிறுவனத்தின் 108 ஆண்டுகள் வரலாற்றில், இந்தாண்டு மே மாதத்தில், 151.50 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்திருந்தோம். ஆனால், 34.50 கோடி ரூபாய் கூடுதலாக, 186 கோடி ரூபாய்க்கு சந்தன பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் 178 கோடி ரூபாய் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த சாதனை, இந்தாண்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

மைசூரு சந்தன சோப்பு உட்பட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 45 வகையான தயாரிப்புகளும் எதிர்பார்த்ததை விட, அதிகமாக விற்பனையாகி உள்ளன.

கே.எஸ்.டி.எல்.,ன் சோப்பு, ஷவர் ஜெல், அகர்பத்திக்கு டிமாண்ட் உள்ளது. தரமான உற்பத்தி, பிராண்டிங், சந்தை விரிவாக்கத்துக்காக நிறுவனம் மேற்கொண்ட முயற்சி, பலனளித்து வருகிறது.

அதிகபட்சமாக, ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து 85 கோடி ரூபாயும்; கர்நாடகா உட்பட மற்ற மாநிலங்களில் இருந்து 100 கோடி ரூபாயும் விற்பனையாகி உள்ளது.

வரும் 2028ம் ஆண்டுக்குள், ஆண்டுதோறும் 5,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. கர்நாடகா சந்தனத்தின் பெருமை, நாடு முழுதும் பரவுவதற்காக, நடிகை தமன்னா, துாதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக சந்தன சோப்பின் துாதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டு, இரண்டு வாரத்தில் 35 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisement