ரூ.158 கோடிக்கு மது விற்பனை

பெங்களூரு: ஆர்.சி.பி., - பஞ்சாப் இடையிலான ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்.சி.பி., அணி வெற்றி பெற வேண்டும் என, பெங்களூரு மட்டுமின்றி, மாநிலம் முழுதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

பல்வேறு கோவில்களில் வேண்டுதல் விடுத்து, அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

நேற்று முன்தினம் இரவு, ஆமதாபாத்தில் நடந்த இறுதி போட்டியை காண, பல இடங்களில் பெரிய திரைகள் பொருத்தப்பட்டிருந்தன. ஆங்காங்கே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, போட்டியை ரசித்தனர்.

ஆர்.சி.பி., வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், வெற்றியை கொண்டாட மது வாங்கி வைத்திருந்தனர். அணி வெற்றி பெற்றதும், அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மது அருந்தி பார்ட்டி நடத்தினர்.

கலால் துறை புள்ளி விபரங்களின்படி, ஒரே நாளில் மதுபான விற்பனை 150 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 30.66 கோடி ரூபாய்க்கு பீர், 127.88 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

கடந்தாண்டு ஜூன் 3ம் தேதி 6.28 கோடி ரூபாய் மதிப்புள்ள பீர், 19.41 கோடி ரூபாய் மதிப்புள்ள லிக்கர் விற்பனையாகியிருந்தது.

ஆனால் நடப்பாண்டு அதே நாளில், பல மடங்கு அதிகமான வருவாய் கிடைத்ததால், கலால் துறை அதிகாரிகள் குஷியில் உள்ளனர்.

ஆர்.சி.பி., அணி வெற்றி பெற்றதும், பலர் பப், பார் அண்டு ரெஸ்டாரென்டுகளுக்கு சென்றனர். பலர் வீட்டிலேயே பார்ட்டி நடத்தினர். மதுபானம் விற்பனை அதிகரிக்க, இதுவும் காரணம்.

Advertisement