சி.சி.பி., அதிரடி சோதனை ரூ.84 லட்சம் போதை பறிமுதல்

பெங்களூரு, ஜூன் 5-

பெங்களூரின் பல இடங்களில் சி.சி.பி., போலீசார் அதிரடி சோதனை நடத்தி, 84 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

பெங்களூரின் பேடரஹள்ளியில், வீடு ஒன்றில் சோதனை நடத்திய போலீசார் 1.200 கிலோ கஞ்சா, 220 கிராம் ஹைட்ரோ கஞ்சா, இரண்டு ஐபோன்களை பறிமுதல் செய்தனர். போதைப்பொருட்களின் மதிப்பு 13 லட்சம் ரூபாய்.

ராஜகோபாலநகரின் தர்ஷன், பிரஜ்வல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாண்டியா, நாகமங்களாவின் பெள்ளூரில் இருந்து, போதைப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி, பெங்களூரில் விற்று வந்தனர்.

தலகட்டபுராவின், கனகபுரா சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சேகரித்து வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது.

அங்கு சென்று சோதனை நடத்தி, 61.82 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாக்கு, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர். இதை பதுக்கி வைத்திருந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று ஹெச்.பி,ஆர்.பி., லே - அவுட் இரண்டாவது ஸ்டேஜில் கடையொன்றில் சோதனையிட்டு, தடை செய்யப்பட்ட இ - சிகரெட், ஹுக்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவரை கைது செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement