'நீதித்துறையில் நிலவும் ஊழல் நம்பிக்கையை குலைக்கிறது'

14

புதுடில்லி: ''நீதித்துறையில் நிலவும் ஊழல் மற்றும் தவறான நடத்தைகள், அத்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கிறது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கவலை தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ஐரோப்பிய நாடான பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தின் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ளார்.

அங்கு அவர் பேசியதாவது:

நீதித்துறையை சுதந்திரமாகவும், அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கவும் கொலீஜியம் அமைப்பு முதலில் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு துறையும் எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாகிறது.

நீதித்துறையிலும் சில தவறான நடத்தைகள் மற்றும் ஊழல்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதனால், நீதித்துறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் விரைவான, தீர்க்கமான மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகள் வாயிலாகவே அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்-.

நீதிபதிகள் ஓய்வு பெற்ற உடனேயே தேர்தலில் போட்டியிடுவது அல்லது அரசின் பிற பதவிகளை பெறுவது, நீதித் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

அவ்வாறு செய்வது, நீதித் துறையின் சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பக்கூடும். நீதித்துறை நீதியை வழங்குவது மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற வேண்டும்.

நானும், என்னுடன் பணிபுரியும் நீதிபதிகளும், பணி ஓய்வுக்கு பின் ஒருபோதும் அரசு வழங்கும் பதவி மற்றும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என பொதுவெளியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement