விதி மீறினால் நடவடிக்கை உணவு பாதுகாப்பு துறை கடும் எச்சரிக்கை

5

சென்னை: தமிழகத்தில் உணவு தயாரிப்பில் ஈடுபடுவோர் மற்றும் விற்பனை செய்வோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:

அனைத்து உணவு வணிகர்களும் http://foscos.gov.in இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிழ் பெற்றிருக்க வேண்டும்

அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி, மருத்துவ தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும்

உணவு பொருட்களில் ஈக்கள், பூச்சிகள் மொய்க்காத வகையில், கண்ணாடி பெட்டியில் மூடி காட்சிப்படுத்த வேண்டும்

சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயை ஒரு முறை மட்டுமே சமைக்க பயன்படுத்த வேண்டும்

நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில், உணவு பொருளை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது

உணவை கையாள்வோர், கையுறை, தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்

சிக்கன், பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கக் கூடாது

உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மென்ட் பேப்பர் அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

பொட்டலமிடப்பட்ட உணவு பொருட்கள் கொள்முதல் மற்றும் விற்பனையின்போது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய உரிமை எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விபரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

உணவு கடைகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்றாலோ, தயாரித்தாலோ, உணவு கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement