பெங்களூரு நெரிசல் சம்பவம்; தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

27

பெங்களூரு; கர்நாடகாவில் சின்னசாமி மைதானம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி மற்றும் 2 இளம்பெண்கள் உயிரிழந்துள்ளனர்.


ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற பிறகு பெங்களூரு அணியினர் நேற்று கர்நாடகாவுக்கு திரும்பினர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெங்களூரு அணி வீரர்கள், சின்னசாமி மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டனர்.


பெங்களூரு அணி வீரர்களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானம் முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனால், ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து கப்பன் பார்க் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரவர் குடும்பத்தினரிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன.


உயிரிழந்தவர்களின் விபரம் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், இந்த கோர சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி மற்றும் 2 இளம்பெண்கள் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த காமாட்சி, அக்ஷதா மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி திவ்யான்ஷி ஆகியோர் உயிரிழந்தனர்.


இதில், இளம்பெண் காமாட்சி,27, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளி தாளாளரின் மகள் ஆவார். இவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதேபோல, சிறுமி திவ்யான்ஷி,14, தன்னுடைய தந்தை சிவகுமார் மற்றும் தாய் அஸ்வினியுடன் சின்னசாமி மைதானம் சென்றிருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement