பயங்கரவாத செயல்களின் குற்றவாளி பாகிஸ்தான்: இந்தியாவை ஆதரிக்க காங்., வலியுறுத்தல்

6

புதுடில்லி: '' பயங்கரவாத செயல்களின் குற்றவாளியாக பாகிஸ்தான் உள்ளது. அதனால் பாதிக்கப்படும் நாடாக இந்தியா உள்ளது. எனவே, இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆதரிக்க வேண்டும்,'' என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.


இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் இருந்து உருவாகும் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்து கொண்டு சர்வதேச சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என காங்கிரஸ் கேட்டு கொள்கிறது.

பயங்கரவாத செயலின் குற்றவாளி பாகிஸ்தான்

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா

அதனை சமமாக பார்க்கக்கூடாது

அவர்களை மிகைப்படுத்தக்கூடாது.

1.
சர்வதேச நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியன, கடன் கொடுத்தால், பாகிஸ்தானின் ராணுவச் செலவை அதிகரிக்கும். அதன் முரண்டு ராணுவம் இந்தியர்கள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும்.

2.
15 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் துணைத்தலைவராகவும், 2025ம் ஆண்டிற்கான தலிபான் தடைகள் குழுவின் தலைவராகவும் பாகிஸ்தானை நியமித்தது துரதிர்ஷ்டவசமானது தவறானது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

3.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை கண்காணிக்க எப்ஏடிஎப் அமைப்பின் கிரே பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கருத்தை சர்வதேச நாடுகள் ஆய்வு செய்ய வேண்டும்.

பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ராஜதந்திர முயற்சிகள் காரணமாக அப்பட்டியலில் 2008 ம் ஆண்டு பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது. மீண்டும் 2012ம் ஆண்டும், 3வது முறையாக 2018 ம் ஆண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

4.
செய்த பாவங்களுக்கு பொறுப்பு ஏற்கச் செய்வது என்பது, இந்தியாவின் நலனுக்கு மட்டும் அல்ல. உலக நாடுகளின் நலனுக்கும் உகந்தது.

அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான ஒசாமா பின்லேடன் , பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு திட்டமிட்ட காலித் ஷேக் முகமதுவும் பாகிஸ்தானைச் சேர்ந்தவன். இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.

Advertisement