கைவினை பொருட்கள் தயாரிக்க பயிற்சி; மலை கிராமத்தில் எதிர்பார்ப்பு
உடுமலை; மலைவாழ் கிராம மக்களுக்கு, கயிறு வாரியத்தின் வாயிலாக கைவினைப்பொருட்கள் மற்றும் கால் மிதியடி தயாரிக்கும் சிறப்பு பயிற்சி வழங்கி, தொழில் துவங்க உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியில், 13க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன.
மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பல்வேறு திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்பட்டன.
பட்டுப்புழு வளர்ப்பு, மூலிகை தைலம் தயாரித்தல் மற்றும் காய்கறி சாகுபடி ஆகிய திட்டங்கள் நடைமுறை சிக்கல்களால், குறுகிய நாட்களில் கைவிடப்பட்டன.
அவர்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்க, கயிறு வாரியம் வாயிலாக உடுமலை, அமராவதி வனசரகத்திலுள்ள, கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கால்மிதியடி தயாரித்தல், கைவினை பொருட்கள், கயிறு திரித்தல் ஆகிய பயிற்சிகளை அளிக்க திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக, அமராவதி அணை அருகேயுள்ள, கரட்டுப்பதி மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த பெண்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
அங்கு, தென்னை நாரில், மான், யானை, குருவிக்கூடு போன்ற வீட்டு அலங்கார பொருட்களை பயிற்சி பெற்ற பெண்கள் தயாரித்தனர். இவ்வாறு, பல்வேறு மலைவாழ் கிராம குடியிருப்பை சேர்ந்த பெண்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
இருப்பினும், தொடர்ச்சியாக பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அவர்களுக்கு போதிய வாய்ப்பில்லை. இதே போல், பயிற்சி பெறாத மலைவாழ் கிராமங்களை சேர்ந்த பெண்களும், தங்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சியளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பயிற்சியும், விற்பனை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொடுத்தால், அப்பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.