'அண்ணன் பொங்கி எழுந்துட்டாரு!'

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.

இதில், 63வது வார்டு காங்., கவுன்சிலர் சிவராஜசேகரன் பேசும்போது, 'புதுப்பேட்டை பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும், கண்டுகொள்வதில்லை. நான் கவுன்சிலரான நாளில் இருந்து மின் தடை தொடர்கிறது' என, ஆவேசமாக குற்றம் சாட்டினார். அப்போதைக்கு அவரை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

ஆயினும், இது மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் கவனத்துக்கு போக, 'உள்ளாட்சி பிரதிநிதிகளின் புகார்களை உதாசீனப்படுத்தாதீங்க' என்று மின்வாரிய பொறியாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார். இதையடுத்து, புதுப்பேட்டை பகுதியில் மின் தடைக்கான பிரச்னைகளை சரி செய்யும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்தன.

இதைப் பார்த்த சிவராஜசேகரனின் ஆதரவாளர் ஒருவர், 'அண்ணன் பொங்கி எழுந்ததும் தான் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கு...' எனக்கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

Advertisement