'உலக' கால்பந்து: உஸ்பெகிஸ்தான் தகுதி

தோஹா: உலக கோப்பை கால்பந்து தொடருக்கு முதன் முறையாக தகுதி பெற்றது உஸ்பெகிஸ்தான்.

'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று அபுதாபியில் நடந்தது. உஸ்பெகிஸ்தான்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதிய போட்டி 'டிரா' (0-0) ஆனது.


'ஏ' பிரிவில் 'டாப்' இடத்தை உறுதி செய்த ஈரான் (9ல் 6 வெற்றி, 2 'டிரா', 1 தோல்வி, 20 புள்ளி), உஸ்பெகிஸ்தான் (9ல் 5 வெற்றி, 3 'டிரா', 1 தோல்வி, 18 புள்ளி) அணிகள் உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன. 'பி' பிரிவில் தென் கொரியா, முதன் முறையாக ஜோர்டான் தகுதி பெற்றன.

இந்தியா ஏமாற்றம்
வரும் உலக கோப்பை தொடரில் (2026) வழக்கமான 32 க்குப் பதில் இம்முறை 48 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆசிய பிரிவில் கூடுதலாக 4 சேர்த்து, மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன.
இதனால் இந்தியா தகுதி பெறும் என நம்பப்பட்டது. மாறாக, ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி, 6 போட்டியில் 1ல் மட்டும் வெற்றி பெற (3 தோல்வி, 2 'டிரா'), உலக வாய்ப்பை இழந்தது.
கடந்த 2018ல் இந்தியா உலகத் தரவரிசையில் இந்தியா 97, உஸ்பெகிஸ்தான் 95 வது இடத்தில் இருந்தன. இதன் பின், சர்வதேச அரங்கில் எழுச்சி பெற்ற உஸ்பெகிஸ்தான், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற, 57 வது இடத்துக்கு முன்னேறியது. முதன் முதலாக உலக கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றது.
ஆனால் இந்திய அணி வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு கோல் அடிக்கவே திணறுகின்றனர். இதனால் தரவரிசையில் 127 வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மீண்டும் உலக வாய்ப்பு நழுவியதால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

Advertisement