1,000 சதுர அடிக்கு ஆண்டுக்கு ரூ.8,724 ரூபாய் குடிநீர் கட்டணம் வசூலால் வியாபாரிகள் அதிருப்தி சிறிய கடைகளின் வரி விகிதத்தை மாற்ற வலியுறுத்தல்

சென்னை, சென்னையில் சிறிய அளவிலான கடைகளுக்கு, 1,000 சதுர அடி அடிப்படையில், 8,724 ரூபாய் குடிநீர் கட்டணம் வசூலிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சொத்து வரிக்கு உள்ளது போல், கட்டண விகித்தில் மாற்றம் செய்ய வேண்டும் என, வணிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை மாநகராட்சி மட்டுமின்றி, அதையொட்டியுள்ள பகுதிகளிலும், குடிநீர் விநியோகத்திற்கான கட்டணத்தை, சென்னை குடிநீர் வாரியம் வசூலித்து வருகிறது. இந்த கட்டணம், வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற பிரிவுகளில் வசூலிக்கப்படுகிறது.
இதில் வீடுகளுக்கு, பயன்பாடு மற்றும் 'ஸ்லாப் ரேட்' அடிப்படையில் குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வணிக நிறுவனங்களுக்கான கட்டண விகிதங்களில், பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக, கட்டட அமைப்பியல் பொறியாளர்கள், வணிகர்களிடம் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி மற்றும் சில உள்ளாட்சிகளில், கட்டடங்களின் பரப்பளவு அடிப்படையிலேயே சொத்து வரி உள்ளிட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
இதில், குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் நிர்ணயித்துள்ள கட்டண விகிதங்களால், நடைமுறையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், 1,000 சதுர அடி மற்றும் அதற்கு மேல் தான் வகைபடுத்தப்படுகின்றன. இதன்படி பார்த்தால், ஒரு நபர், 288 சதுர அடி பரப்பளவுக்கு கடை வைத்திருந்தால், அவர், 1,000 சதுர அடி என்ற வகைபாட்டில் சேர்க்கப்பட்டு, ஆண்டுக்கு, 8,724 ரூபாய் கட்டணமாக விதிக்கப்படுகிறது.
ஆனால், சொத்து வரி விதிக்கப்படும் நடைமுறையை இதில் கடைபிடித்தால், 288 சதுர அடி கடை வைத்துள்ளவருக்கு, 2,616 ரூபாய் மட்டுமே கட்டணமாக வரும்.
கடைகளுக்கான குடிநீர் கட்டணங்களுக்கு குறைந்தபட்ச வரம்பை, 1,000 சதுர அடி என்பதில் இருந்து குறைக்க வேண்டும். இது தொடர்பாக, தமிழக அரசு மற்றும், நகராட்சி நிர்வாகத்துறையிடம் புகார் அளித்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரம்பு குறைய வாய்ப்பு
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் கட்டணத்தை வசூலிப்பதற்கான வரம்பு தொடர்பாக, பல்வேறு முறையீடுகள் வந்துள்ளன. எனவே, 1,000 சதுர அடி என்று உள்ள குறைந்தபட்ச வரம்பை, 500 சதுர அடியாக குறைப்பது குறித்த பரிந்துரை, அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!
-
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை