கெங்குவார்பட்டி பேரூராட்சியில் ரூ.1.67 கோடி திட்டம் பறிபோகிறது: தலைவர், து.தலைவர் 'ஈகோ' வால் முடங்கிய நிர்வாகம்

தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி பேரூராட்சியில் தலைவர், துணைத்தலைவரிடையே ஏற்பட்ட 'ஈகோ' வால் 9 மாதங்களாக பேரூராட்சி கூட்டம் நடத்தாமல் நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் ரூ.1.67 கோடியில் நவீன எரிவாயு தகனமேடை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.



கெங்குவார்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இப்பேரூராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., 10, அ.தி.மு.க., 3, ம.தி.மு.க., 1, சுயே., 1 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். 6 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தமிழ்செல்வி தலைவராகவும், 10 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஞானமணி துணைத்தலைவராக தேர்வாகினர். தலைவருக்கும், துணைத்தலைவருக்கும் துவக்கத்தில் சுமூக உறவு இருந்தது.

பின் பணிகளுக்கு டெண்டர் விடுவதில் அவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது.

இதனால் தலைவர் ஒரு கோஷ்டியாகவும், துணை தலைவர் ஒரு கோஷ்டியாக செயல்பட்டனர். பெரும்பாலான தி.மு.க., கவுன்சிலர்கள் துணைத்தலைவருக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் கடந்தாண்டு செப்டம்பருக்கு பின் 9 மாதங்களாக பேரூராட்சி கூட்டம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையே 'ஈகோ' வால் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் அளவிற்கு நிலைமை உருவானது.

பேரூராட்சி நிர்வாகம் முடங்கி இரு ஆண்டுகளில் 7 செயல் அலுவலர்கள் மாறியுள்ளனர். 9 மாதங்களாக பேரூராட்சி கூட்டம் நடக்காததால் வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தராததால் ஊரெங்கும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.திட்டம் நிறைவேற்றுவதில் சிக்கல்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில் கெங்குவார்பட்டி பேரூராட்சிக்கு ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை திட்டம் அறிவித்தார். இருவருக்கும் இடையே நிலவும் பிரச்னையால் திட்டம் செயல்படுத்தாமல், போடி தாலுகா மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.-

Advertisement