மாந்தோப்பில் புகுந்து மாங்காய்களை ‍ சேதப்படுத்திய யானைகள் கூட்டம்

தளி, தளி அருகே, மாந்தோப்பிற்குள் புகுந்த யானைகள், மாங்காய்களை சேதப்படுத்தியதால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட தேவரபெட்டா காப்புக்காட்டில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வரும் யானைகள், பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு வனத்தில் இருந்து வெளியே வந்த, 3 யானைகள், தளி அடுத்த தாசரப்பள்ளி கிராமத்தில் உள்ள சம்பங்கிராமரெட்டி, 60, என்பவரது மாந்தோப்பிற்குள் புகுந்தன. அங்கு மா மரங்களின் கிளைகளை உடைத்து சேதப்படுத்திய யானைகள், மாங்காய்களை தின்றும், பறித்து கீழே போட்டும் வீணாக்கின. இதுவரை, 3 முறை சம்பங்கிராமரெட்டி மாந்தோப்பிற்குள் யானைகள் வந்து சென்றுள்ளன.

அதனால், 3 டன் அளவிற்கு மாங்காய்கள் வீணாகி விட்டதாக விவசாயி தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல், அருகிலுள்ள சந்திராரெட்டி, 65, என்பவரது மாந்தோப்பிற்குள் புகுந்த யானைகள், காய்களை சேதப்படுத்தி விட்டு, அங்கிருந்து வனப்பகுதி நோக்கி சென்றன. நேற்று காலை நிலத்திற்கு சென்ற விவசாயிகள், மாங்காய்கள் சேதமாகி கீழே உதிர்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி மற்றும் நிர்வாகிகள், சேதமான மாங்காய்களை சென்று பார்த்தனர். வனத்துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement