ரூ.2.50 கோடியில் திட்டப்பணி நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

தர்மபுரி, தர்மபுரி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் லட்சுமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் நித்யா முன்னிலை வகித்தார். நகராட்சி கமிஷனர் சேகர் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் மாதையன் தீர்மானங்கள் குறித்து பேசினார்.

தர்மபுரி நகரிலுள்ள, அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் துார்வாரி, மண் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும். தர்மபுரி டவுன் நகராட்சி பள்ளி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நகர பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். நகரில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த, கொசு மருந்து அடிக்க வேண்டும். கழிவு நீர் வெளியேறும் வகையில் முறையாக சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். நிலுவை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
தர்மபுரி நகரில் குடிநீர், சாலை பணிகள், சாக்கடை வசதி என்பன உட்பட, 81 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து தர்மபுரி நகரில், 2.50 கோடி ரூபாய் மதிப்பிலான, திட்டப் பணிகளை மேற்கொள்ள கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் அறிவழகன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர் சுசீந்திரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement