கடைகளை அகற்றுவது தடையாணையால் நிறுத்தம்

விருதுநகர்: விருதுநகரில் உள்ள கலெக்டர் அலுவலக கடைகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் நேற்றும் முயற்சித்த நிலையில் சங்கங்கள் மீண்டும் வாக்குவாதம் செய்தன. இதில் சில சங்கங்கள் நேற்று மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடையாணை பெற்றதால் கடைகளை அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வணிக ரீதியாக நடத்தப்படும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 14 கடைகளை அகற்ற மே 16, 27ல் பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் (ஜூன் 5)ல் மாலை 3:00 மணிக்கு அகற்றப்படும் என இறுதி நோட்டீஸ் வழங்கி அகற்ற நடவடிக்கைக்காக பொதுப்பணித்துறையினர் வந்தனர். ஆனால் கடைகளை நடத்தும் சங்கத்தினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இது பாதியிலே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலையும் 7:45 மணிக்கெல்லாம் பொதுப்பணித்துறையினர் கடைகளை அகற்ற வந்தனர். அப்போது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. சங்கத்தினர் கடைகளை அகற்ற விடாமல் விடாப்பிடியாக இருந்தனர். போலீசார் குவிக்கப்பட்டனர்.

மதியம் வருவாய்த்துறை சங்கம், போலீஸ் அமைச்சு பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட 4 சங்கங்கள் நேற்று உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடர்ந்து மற்ற சங்கங்களை போல இடைக்கால தடையாணை பெற்றனர். இதையடுத்து கடைகள் அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பொதுப்பணித்துறையினர் கூறினர்.

Advertisement