பீளமேடு பகுதியில் பயணிகள் மேம்பாலத்தை கடக்க வழித்தடம்

கோவை; கோவை, பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டில் வரும் பயணிகள், பஸ் ஸ்டாப்புக்கு செல்வதற்காக, மேம்பாலத்தின் மையத்தடுப்பு சுவரை இடித்து வழியேற்படுத்திக் கொடுக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருக்கிறது.

கோவை - அவிநாசி ரோட்டில், உப்பலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஏறுதளங்கள் மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. பீளமேடு ராதாகிருஷ்ணன் மில் ஸ்டாப் பகுதியில் ஏறுதளம் அமைக்கப்படுகிறது.

விளாங்குறிச்சி ரோட்டில் வருவோர், அவிநாசி ரோட்டுக்கு வர முடியாத அளவுக்கு 'ரேம்ப்' ஏற்படுத்தப்படுகிறது. வாகனங்களில் வருவோர், இடதுபுறம் திரும்பி, பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரி எதிர்புறம் விடப்பட்டுள்ள வழியில், 'யூ டேர்ன்' எடுத்துச் செல்ல வேண்டும்.

அதேபோல், ராதாகிருஷ்ணா மில் பஸ் ஸ்டாப்புக்கும் அவ்வளவு துாரம் பொதுமக்கள் நடந்து சென்று வர வேண்டிய நிலை உள்ளது. முதியவர்கள் மிகவும் சிரமப்படுவர். லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வெகுதுாரம் நடந்து சென்று வருவது, அவதியை ஏற்படுத்தும்.

வாகன போக்குவரத்துக்கு இடையே, நடந்து சென்று வருவது இடையூறை ஏற்படுத்துவதோடு, விபத்தை உண்டாக்கும் என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

மாநகராட்சி, 26வது வார்டு கவுன்சிலர் (ம.தி.மு.க.,) சித்ரா, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், இதுதொடர்பாக முறையிட்டார்.

நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி தலைமையிலான குழுவினர், அப்பகுதியில் கள ஆய்வு செய்தனர்.

அப்போது, பஸ் ஸ்டாப்புக்கு வரும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் அவர்களுக்கு புரிந்தது. சாலை பாதுகாப்பு குழுவினருடன் ஆலோசித்து, பழமுதிர் நிலையம் எதிரே மையத்தடுப்பை உடைத்து, பாதசாரிகள் செல்வதற்கு வழியேற்படுத்தவும், அப்பகுதியில் சிக்னல் அமைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணி மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement