லெட்சுமி குபேர தியான மண்டபம் கும்பாபிஷேகம் விமரிசை

வண்டலுார்:வண்டலுார் அடுத்த ரத்தினமங்கலத்தில், லெட்சுமி குபேர சுவாமி தியான மண்டபத்தின் மஹா கும்பாபிஷேகம், நேற்று காலை விமரிசையாக நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாலுகா, ரத்தினமங்கலம் கிராமத்தில், லெட்சுமி குபேரரை மூலவராக வைத்து, உலகின் முதல் கோவில், 2003ம் ஆண்டு கட்டப்பட்டது.

தவிர, இக்கோவிலில் அறுபடை முருகனுடன் வீற்றிருக்கும் செல்வமுத்து குமரன், பக்த ஹனுமான் மற்றும் 16 வகை ஷோடச கணபதி, நவக்கிரகங்களும் துணைவியருடன் உள்ள சன்னிதிகளும் உள்ளன.

பக்தர்கள் வேண்டிய கோரிக்கைகள் நிறைவேறியதால், பகுதிவாசிகள் மற்றும் சுற்றுப்புற மக்களின் இஷ்ட கோவிலாக, லெட்சுமி குபேர தியான மண்டபம் மாறியது.

இதையடுத்து, 2012ல் கோவில் புனரமைக்கப்பட்டு, 2013 டிச., 6ம் தேதி, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், அய்யப்பன், அதிர்ஷ்ட தேவி, ஸ்வர்ண கவுரி, சிரிக்கும் புத்தர் மற்றும் பரிவார தேவதைகள் உள்ளிட்ட உட்புற சன்னிதிகளில், 2024ல் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டு, கடந்த மாதம் முடிவடைந்தன.

இதையடுத்து, கடந்த 4ம் தேதி காலை 9:05 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமத்துடன், கோவில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் துவக்கப்பட்டன.

தொடர்ந்து நேற்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் துவக்கப்பட்டு, காலை 8:20 மணிக்கு லெட்சுமி குபேரர் மற்றும் பரிவார கோவில் கலச விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது.

இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement