நெருஞ்சிப்பேட்டை-பூலாம்பட்டி இடையே படகு போக்குவரத்தை தொடங்கிய அமைச்சர்

பவானி, அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டை காவிரி ஆற்றங்கரை பகுதியில் இருந்து தினமும் மூன்று படகுகள், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கு இயக்கப்பட்டது. கடந்த ஆண்டு இதற்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ஏலம் நடந்தது.

இதில் அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., கோவிந்தராஜ், (தற்போது தி.மு.க.,வில் உள்ளார்), 4.5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். மேலும் மூன்று புதிய படகுகள் கடலுாரில் இருந்து வரவழைக்கப்பட்டது. மூன்றும் வர்ணம் பூசப்பட்டு தயார் செய்யப்பட்டது.
இந்நிலையில் படகு போக்குவரத்தை, ஈரோடு மாவட்டத்துக்கு நேற்று வந்த, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். கட்சியினருடன் நெரிஞ்சிப்பேட்டையில் இருந்து பூலாம்பட்டி வரை சென்று மீண்டும் நெருஞ்சிப்பேட்டை திரும்பினார். படகு தினமும் காலை, 7:10 மணியில் இருந்து இரவு, 7:10 மணி வரை செயல்படும். நபர் ஒன்றுக்கு, 20 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement