அமித்ஷாவின் வருகை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அர்ஜூன் சம்பத் நம்பிக்கை

திண்டுக்கல்:''உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை முதல்வர் ஸ்டாலின் வரை உளற வைத்துள்ளது. நிச்சயம் அரசியல் மாற்றம் நடக்கும் ''என ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது : திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி அம்மன் கோயில் திருவிழாவின் போது வேண்டுமென்றே கிறிஸ்தவர் என்ற போர்வையில் தாக்குதல் நடத்தி உள்ளனர். போலீசார் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மக்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக நின்ற ஹிந்து அமைப்பினர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஹிந்துக்கள் எங்கெல்லாம் குறைந்து சிறுபான்மையாகின்றனரோ அங்கெல்லாம் இதுபோன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகிறது.

மதுரையில் நடக்க உள்ள முருகன் பக்தர்கள் மாநாட்டிற்கு போலீசார் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துகின்றனர். மிகப்பெரிய ஆன்மிக எழுச்சியை, திருப்புமுனையை ஏற்படுத்துகிற மாநாடாக முருகன் மாநாடாக அமையும். முருகன் மாநாட்டை தொடர்ந்து திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டுமென கோரி அபிராமி அம்மன் பக்தர்கள் மாநாடும், திருவண்ணாமலையில் 1 கோடி ருத்ராட்சம் வழங்கி சிவ பக்தர்கள் மாநாடும் நடக்க உள்ளது.

அமைச்சர் மனோ தங்கராஜ் கூட்டமாக கோயிலுக்கு போக்கூடாது எனக் கூறியது கண்டித்தக்கது. கமல் ஒரு அரசியல் வியாபாரி. பணத்திற்காக என்ன வேண்டுமானலும் செய்வார். நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சித்தார்த் போன்றோர்கள் தற்போது எங்கே போய்விட்டனர் என தெரியவில்லை.

சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கிறது. அமித்ஷாவின் வருகை முதல்வர் ஸ்டாலின் வரை உளற வைத்துள்ளது. நிச்சயம் அரசியல் மாற்றம் நடக்கும். பழனிசாமி முதல்வராவார். இவ்வாறு அவர் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அவர் கூறியதாவது:

திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் சிவன் கோயில் உள்ளிட்ட பல கோயில் நிலங்கள், இடங்கள், கடைகளை பலர் ஆக்கிரமித்துள்ளனர். மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் மதமாற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. மதமாற்றத்தால் குடும்பங்கள் சிதைகின்றன. குலதெய்வ வழிபாடுகள் இல்லாமல் போகிறது. திருப்பரங்குன்றம் மலை முழுவதுமே ஹிந்துகளுக்கு சொந்தம் என்றார்.

Advertisement