லாரியுடன் கார் உரசி வாக்குவாதம் வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் நெரிசல்

வண்டலுார்:வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில், நேற்று காலை கார் மீது லாரி உரசிய பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வண்டலுார் -- கேளம்பாக்கம் இடையேயான 20 கி.மீ., துாரமுள்ள சாலை, சென்னை புறநகரின் முக்கிய வழித்தடமாக உள்ளது.

இதில், ஊனமாஞ்சேரி எல்லைக்கு உட்பட்ட இடத்தில், சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம், இணைப்பு பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இதனால், அந்த இடத்தில் 100 மீ., துாரத்திற்கு, ஒருவழிப் பாதையாக சாலை மாற்றப்பட்டு, அனைத்து வாகனங்களும் மெதுவாக பயணித்துச் செல்கின்றன.

இந்நிலையில், நேற்று காலை 10:20 மணியளவில், வண்டலுார் நோக்கி வந்த காரும், டிப்பர் லாரியும், ஒரே நேரத்தில் ஒருவழிப் பாதைக்குள் நுழைய முயற்சித்த போது, கார் மீது லாரி உரசியது.

இதனால் கார் உரிமையாளர், லாரி ஓட்டுநர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இரு வாகனங்களும் அதே இடத்தில் நிறுத்தப்பட்டன.

இதனால், பின்னால் வந்த வாகனங்கள் அணிவகுத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின், 11:30 மணியளவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார் உரிமையாளர் மற்றும் லாரி ஓட்டுநர் ஆகியோரை சமரசம் செய்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இதனால், வண்டலுார் -- கிளாம்பாக்கம் சாலையில், ஒன்றரை மணி நேரம், 8 கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் தவித்தனர்.

Advertisement