அடுத்தாண்டு ஏப்ரலில் வங்கதேச தேர்தல்

டாக்கா:நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

இதற்கிடையே இந்த ஆண்டுக்குள் அந்நாட்டின் பொதுத்தேர்தலை நடத்தும்படி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்நாட்டு மக்களிடையே முகமது யூனுஸ் நேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “வங்கதேசத்தின் பொதுத்தேர்தலை நடத்தும்படி அனைத்து கட்சியினருடன் விவாதிக்கப்பட்டது.

''இத்தேர்தலை நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுத்தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரலின் முதல் பாதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செயல்திட்டத்தை, தேர்தல் கமிஷன் வரும் மாதங்களில் துவங்கும்” என, குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement