ரூ.10 கோடி திமிங்கல எச்சம் கடத்திய மூவர் கைது

பணஜி,:கோவாவில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை கடத்திய மூவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கோவாவில் சங்வேம் கிராமத்தில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில், திமிங்கல எச்சம் என சொல்லப்படும் மெழுகு போன்ற பொருள் கடத்தப்பட்டது தெரியவந்தது.

மொத்தம், 5.75 கிலோ எடை உடைய திமிங்கல எச்சத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய். இதை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த கோவாவைச் சேர்ந்த இருவரையும், மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒருவரையும் கைது செய்தனர்.

அஜீரணக் கோளாறு காரணமாக திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து சுரக்கும் இந்தப் பொருள் 'ஏம்பர்கிரீஸ்' என அழைக்கப்படுகிறது. மருத்துவத் துறையிலும், வாசனைப் பொருட்கள் தயாரிப்பிலும் அதிகளவு பயன்படுத்தப்படும் இந்த பொருள், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி பாதுகாக்கப்படுகிறது.

வெப்ப மண்டல கடற்பரப்பில் அதிகளவு காணப்படும் ஏம்பர்கிரீஸ், சட்டவிரோதமாக கடத்துவது தண்டனைக்குரிய குற்றம். கைது செய்யப்பட்டவர்களுக்கு திமிங்கல எச்சம் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement