மணல் கடத்திய 10 பேர் கைது 26 லாரி, 3 கார்கள் பறிமுதல்

கரூர்:கரூர் அருகே, மணல் கடத்தலில் ஈடுபட்ட 26 லாரிகள், மூன்று கார்கள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் அள்ள, உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. எனினும், காவிரி, அமராவதி ஆறுகளில் சட்ட விரோதமாக இரவு 11:00 மணி முதல் அதிகாலை, 4:00 மணி வரை லாரி, வேன், டூ-வீலர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுகிறது.

இதுகுறித்து, நம் நாளிதழில் அடிக்கடி செய்தி வெளியானது. எனினும், கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவது தொடர்ந்தது.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறுகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறதா என, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.

அப்போது, கரூர் அருகே மண்மங்கலத்தில், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் காளியப்பனுக்கு சொந்தமான மணல் சலிப்பகத்தில், காவிரியாற்று மணல் சட்ட விரோதமாக அள்ளப்பட்டு, சலிக்கப்பட்டு வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு, லாரிகள் மூலம் அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, மணல் சலிப்பகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 26 லாரிகள், மூன்று கார்கள், ஒரு லேப்டாப், நான்கு ரப்பர் ஸ்டாம்புகள், தனியார் வங்கி காசோலைகள், பில் புக், 100 யூனிட் மணல் மற்றும் 2.26 லட்சம் ரூபாயை, திருச்சி தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின், இந்த வழக்கு வாங்கல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சதீஷ்குமார், 28, சேகர், 35, உள்ளிட்ட 10 பேரை வாங்கல் போலீசார் கைது செய்து, கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலரை, வாங்கல் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement