பாலக்கோடு அருகே லாரி மீது கார் மோதல் மலையாள நடிகர் தந்தை பலி; 2 பேர் காயம்

திருச்சூர்: பாலக்கோடு அருகே, லாரி மீது கார் மோதியதில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை பலியானார்.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், அஞ்சூர் கிராமம் செருவந்துார் ஹவுஸ்சை சேர்ந்தவர் ஷைன் டாம் சாக்கோ, 41; மலையாள நடிகர். இவர் தமிழில், குட் பேட் அக்லி, பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

போதைக்கு அடிமையான இவர் சிகிச்சைக்காக, கேரளாவில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருக்கு, தந்தை சி.பி.சாக்கோ, 70, தாய் மரியா கார்மேல், 68, சகோதரர் ஜோஜோன் சாக்கோ, 36, ஆகியோருடன், 'கியா' காரில் சென்றார்.

அந்த காரை கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், புதுகாட்டுபரம்புவை சேர்ந்த அனிஷ், 42, என்பவர் ஓட்டினார். நேற்று காலை, 6:30 மணிக்கு, தர்மபுரி - ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலையில், பாலக்கோடு பாறையூர் அருகே, முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் கார் மோதியது. இதில், காரின் முன்பகுதி நொறுங்கியது.

தலையில் படுகாயமடைந்த நடிகரின் தந்தை சி.பி.சாக்கோ, சம்பவ இடத்திலேயே பலியானார். நடிகர் ஷைன் டாம் சாக்கோவிற்கு இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவும், அவரது தாய் மரியா கார்மேலுக்கு பின்பக்க இடுப்பில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.

அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், அனைவரும் மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாலக்கோடு போலீசார் சி.பி.சாக்கோவின் உடலை மீட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சீதாராம் நகரை சேர்ந்த லாரி டிரைவர் பகாஷ் என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கடந்த ஏப்ரலில் கொச்சி போலீசார் கைது செய்தனர். எர்ணாகுளத்திலுள்ள விடுதியில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் ரெய்டில், அங்கிருந்து ஷைன் டாம் சாக்கோ தப்பியோடிய, 'சிசிடிவி' காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல, மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் என்பவர், சூத்ரவாக்யம் என்ற படப்பிடிப்பின்போது, ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் உட்கொண்டு, தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக, குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement