திருநள்ளாறு சனி பகவான் கோவில் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்

காரைக்கால்:திருநள்ளார் சனி பகவான் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுந்தனர்.

புதுச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் பிரமோற்ச விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினசரி விநாயகர் மற்றும் சுப்ரமணியர் உற்சவம் நடந்தது. கடந்த 30ம் தேதி அடியார்க்கு நால்வர் புஷ்ப பல்லக்கு ஊர்வலம், 1ம் தேதி செண்பகதியாகராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்தில் இருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.

முக்கிய விழாவான நேற்று செண்பகத்தியாகராஜர், நிலோத்தம்பாள், விநாயகர்,முருகர், சண்டிகேஸ்வரர் சுமிகள் 5 தேர்களில் ஊர்வலம் வந்தனர். தேரோட்டத்தை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், அமைச்சர் சாய் சரவணன் குமார், சிவா எம்.எல்.ஏ., கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், டி.ஐ.ஜி., சத்ய சுந்தரம், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் தியாகராஜா... தியாகராஜா... கேஷங்கள் முழுங்க 5 தேர்களை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுந்தனர்.

5 தேர்கள் தெற்கு வீதியில் புறப்பட்டு வடக்கு, மேற்கு வீதிகள் வழியாக நிலையை வந்தடைந்தன. இன்று சனீஸ்வர பகவான் தங்க காகம் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement